ஷா ஆலம், நவ 13– தாமான் டெம்ப்ளர் தொகுதியில் நாளை ஞாயிற்றுக்கிழமை இளையோருக்கான செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டம் நடைபெறவுள்ளது. பந்திங் தொகுதியில் இத்திட்டம் அடுத்த வாரம் மேற்கொள்ளப்படும்.
இந்த தடுப்பூசி இயக்கம் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும் என்று சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுவதிலிருந்து மாநில மக்கள் யாரும் விடுபடாமலிருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
தாமான் டெம்ப்ளர் தொகுதியிலுள்ள கம்போங் செலாயாங் இண்டா சமூக மண்டபத்தில் இந்த தடுப்பூசி இயக்கம் நடத்தப்படும். பந்திங் தொகுதி நிலையிலான தடுப்பூசி இயக்கம் வரும் 21 ஆம் தேதி கோல லங்காட் நகராண்மைக் கழக விளையாட்டு மையத்தில் நடைபெறும்.
தடுப்பூசி பெறுவதற்கான முன்பதிவு தேதி கிடைக்காத அல்லது இரண்டாவது தடுப்பூசி பெறுவதற்கான தேதியை தவறவிட்ட 12 வயதுக்கும் மேற்பட்ட உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினர் இந்த தடுப்பூசி இயக்கத்தில் பங்கு கொள்ளலாம்.