கோலாலம்பூர், நவ13- நாட்டின் கோவிட்-19 (ஆர்-நோட்) நோய்த்தொற்று விகிதம் 1.0 ஆக உயர்ந்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சுகாதார அமைச்சு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார். ஊக்கத் தடுப்பூசி பெறுவதற்கு முன்பதிவு பெற்றவர்கள் அத்தடுப்பூசியை விரைந்து பெறுமாறு தனது டிவிட்டர் பதிவின் வழி அவர் கேட்டுக் கொண்டார். மூத்த குடிமக்கள் கூடுமானவரை நெரிசலான இடங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆர்-நோட் மதிப்பு என்பது கோவிட்-19 நோயாளியின் தொற்று அளவைக் குறிக்கிறது, அதாவது ஒருவருக்கு ஏற்படும் நோய்த் தொற்று மூலம் எத்தனை பேர் பாதிக்கப்படலாம் என்பதை காட்டுகிறது. இதற்கிடையில், சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தனது ட்விட்டர் பதிவில், தொற்று விகிதம் மீண்டும் அதிகரிப்பது கவலையளிக்கும் வகையில் உள்ளதாக குறிப்பிட்டார். நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்திய அவர், பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் ஊக்கத் தடுப்பூசியை உடனடியாக பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். வியாழனன்று மொத்தம் 6,323 புதிய கோவிட்-19 சம்பவங்கள்பதிவு செய்யப்பட்டன. கடந்த நான்கு நாட்களாக நாட்டில் கோவிட்-19 எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். மலேசியாவில் தினசரி கோவிட் -19 நோய்த் தொற்று எண்ணிக்கை அண்மைய காலமாக குறைந்து வந்த நிலையில் கடந்த திங்கள் முதல் நேற்று வரை மீண்டும் உயர்ந்தன.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2021/10/KKM-Tan-Sri-Dr-Noor-Hisham-Abdullah-960x644.jpg)