ஷா ஆலம், நவ 13- சிலாங்கூர் புத்தக விழா 2021 அடுத்த மாதம் 2 முதல் 12 ஆம் தேதி வரை ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வோருக்கு அதிர்ஷ்ட குலுக்கின் வழி 50,000 வெள்ளி வரை பரிசை வெற்றி கொள்ள வாய்ப்பு உள்ளது.
இந்த போட்டியின் ஒரு பகுதியாக இவ்விழாவில் புத்தகம் வாங்குவோர் தினசரி 500 வெள்ளியை ரொக்கப் பரிசாக வெற்றி கொள்வதற்குரிய வாய்ப்பு வழங்கப்படுவதாக சிலாங்கூர் பொது நூலக கழகத்தின் இயக்குநர் டத்தின் படுகா மஸ்துரா முகமது கூறினார்.
புத்தகங்களை வாங்குவோருக்கு நாங்கள் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. மாறாக, அவர்கள் அங்கு வழங்கப்படும் பாரத்தில் இவ்விழாவில் தாங்கள் செய்த செலவு தொடர்பான விபரங்களை எழுதி அதிர்ஷடக் குலுக்கு பெட்டியில் போட்டால் போதுமானது என்று அவர் குறிப்பிட்டார்.
இணையம் வாயிலாக புத்தகங்களை வாங்குவோரும் இந்த போட்டியில் பங்கேற்கலாம் எனக் கூறிய அவர், வெற்றியாளர் குறித்த விபரங்கள் அன்றைய தினமே வெளியிடப்படும் என்றார்.
இந்த 11 நாள் புத்தக கண்காட்சியில் மின் விளையாட்டு, லேகோ விளையாட்டு, டிரோன் சாதனத்தைப் பயன்படுத்தும் விதம், நகர்புற வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தவிர சிறார்களுக்கான எழுத்துத் திறன் கருத்தரங்கு, பெற்றோரியல் கருத்தரங்கு மற்றும் ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பேச்சுப் பயிற்சி போன்ற அம்சங்களும் இங்கு இடம் பெறும் என அவர் கூறினார்.