ஷா ஆலம், நவ 14- தேர்தலில் போட்டியிட தகுதியுடைய குடிமக்களின் வயதை 18 ஆகக் குறைக்கும் வகையில் சிலாங்கூர் அரசு மாநில அமைப்புச் சட்டத்தில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவுள்ளது. இம்மாதம் 26 முதல் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும் போது இந்தத் திருத்தமும் செய்யப்படும் என்று இளைய தலைமுறை மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார். அடுத்த சட்டமன்றக் கூட்டத்தில் செய்யப்படும் சட்டத் திருத்தம், சிலாங்கூரில் இளைஞர்களின் எதிர்காலத்திற்கான உத்வேகத்தையும் வளர்ச்சியையும் மாநில அரசு முழுமையாக ஆதரிக்கிறது என்பதற்கான அறிகுறியாகும் என்று அவர் சொன்னார். இதன் அடிப்படையில் ஒரு தொடக்கமாக, அரசு சாரா அமைப்புகள் மற்றும் இளைஞர் சங்கங்களின் கருத்துக்களை செவிமடுக்க "டவுன் ஹால் வாக்களிப்பு 18" என்ற திட்டத்தை மேற்கொள்கிறோம் என்று முகமட் கைருடின் ஓத்மான் கூறினார். இங்குள்ள ஜூப்லி பேராக் அரங்கில் நேற்று 18 வயதினருக்கான வாக்களிப்பு தொடர்பான டவுன் ஹால் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கலந்துகொண்டார். இளைஞர்கள் மத்தியில் அரசியல் ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்வதற்காக அடுத்த ஆண்டு இளைஞர் சங்கங்களை இணைத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இளையோர் சந்திப்பு நிகழ்வுகள் நடத்தப்படுய் என்றும் அவர் தெரிவித்தார். இளைஞர்கள் மத்தியில் அரசியல் ஆர்வம் இல்லாதிருப்பதை ஒப்புக் கொண்ட அவர், இத்தகைய திட்டங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் அவர்களை அணுக மாநில அரசு முயற்சிக்கிறது என்று அவர் கூறினார்.