அலோர் காஜா, நவ 15- சிலாங்கூர் மாநிலத்தை நிர்வகிப்பதில் பக்கத்தான் ஹராப்பான் குறிப்பாக கெஅடிலான் கட்சி அடைந்துள்ள வெற்றி மலாக்கா மாநிலத் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய பேசும் பொருளானது.
சிலாங்கூர் மாநிலத்தை கடந்த 2008 முதல் இப்போது வரை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி தக்க வைத்துக் கொண்டிருப்பதற்கு அதன் சிறப்பான நிர்வாகமே காரணம் என்று பாயா ரும்புட் தொகுதிக்கான ஹராப்பான் வேட்பாளர் டத்தோ சம்சுல் இஸ்கந்தார் முகமது அகின் கூறினார்.
ஹராப்பான் கூட்டணியின் வெற்றியை மக்களிடம் எடுத்துரைப்பதற்கு இதுவே தக்க சான்றாகும். பிரசார நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கபட்டுள்ள போதிலும் கிடைக்கின்ற வாய்ப்பினை பயன்படுத்தி ஹராப்பான் கூட்டணி மற்றும் கெஅடிலான் கட்சியின் வெற்றியை மக்களுக்கு எடுத்துரைத்து வருகிறோம் என்றார் அவர்.
ஹராப்பான் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமிருடின் ஷாரியின் வருகை இத்தேர்தலில் அரசியல் ரீதியாக சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
பாயா ரும்புட் தொகுதியில் ஐந்து முனைப் போட்டி நிலவுவது குறித்து கருத்துரைத்த அவர், இத்தேர்தலில் தகுதியான வேட்பாளரை தேந்தெடுப்பதற்குரிய வாய்ப்பினை வாக்காளர்களுக்கு இது வழங்குகிறது என்றார்.