ஷா ஆலம், நவ 15- பெட்டாலிங் மாவட்டத்தில் கடந்த மாதம் காலரா நோயினால் பீடிக்கப்பட்ட நோயாளி குணமடைந்துள்ளதாக சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
இந்நோய்ப் பரவலுக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக சம்பந்தப்பட்ட உள்நாட்டு நோயாளியுடன் தொடர்பில் இருந்த அனைத்து உணவு விநியோப்பாளர்களும் சோதனைக்குப் படுத்தப்பட்ட போதிலும் அந்நோய்க்கான மூலம் கண்டறியப்படவில்லை என்று அவர் சொன்னார்.
கடந்த மாதம் 21 ஆம் தேதி முதன் முறையாக அந்நோய் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து உணவு விநியோகிப்பாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர்கள் யாரும் இந்நோயினால் பீடிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. நோய்க்கான மூலக் காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படாத போதிலும் இத்தகைய சம்பவங்களை எதிர் கொள்ள மாநில சுகாதாரத் துறை தயார் நிலையில் உள்ளது என்றார் அவர்.
உணவுப் பொருள் விற்பனை செய்வோர் சுத்தம் மற்றும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வயிற்றுப் போக்கு, வாந்தி அல்லது வாந்தி எடுப்பது போன்ற உணர்வு உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
பொது மக்கள் கைகளை அடிக்கடி கழுவுவது, சமைக்காத அல்லது முறையாக சமைக்கப்படாத உணவுகளை உண்பதை தவிர்ப்பது, கொதிக்க வைத்த அல்லது சுத்திகரிக்கப்பட்ட நீரை அருந்துவது போன்ற நடவடிக்கைகள் மூலம் சுத்தத்தை பேண வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.