ஷா ஆலம், நவ 16- கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரிப்பதற்கான சாத்தியத்தைக் கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சு முழு தயார் நிலையில் உள்ளது.
கடந்த சில தினங்களாக நோய்த் தொற்று பீடிப்பதற்கான சாத்தியக்கூறு விகிதம் 1.0 ஐ தாண்டியைத் தொடர்ந்து அந்நோய்த் தொற்றுக்கு எதிராக எதிர்வினையாற்றுவது தொடர்பான நடவடிக்கையை அது மேற்கொண்டு வருகிறது.
நோய்த் பரவல் மோசமான நிலையை எட்டுவதற்கான சாத்தியத்தை மதிப்பீடு செய்யும் அதே வேளையில் நெருக்கடிக்கு எதிராக எதிர்வினையாற்றுவது தொடர்பான மாதிரி திட்டத்தை மேற்கொள்ளும்படி சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் சில அரசு நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
“2021 கே.கே.எம். கோவிட்-19 எக்சசைஸ் டேபிள்டோப்“ எனும் திட்டம் கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்.டி. எனப்படும் நோய்த் தொற்றுக்கான சாத்திய விகிதம் 1.05 ஐ எட்டியுள்ளது. சுகாதார பராமரிப்புக்கான ஆற்றல் அதிகரிப்பை எதிர்கொள்ள தாம் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் மேலும் சொன்னார்.
அந்த மாதிரி திட்டத்தை மருத்துவமனை சேவைக்கான தயார் நிலை மற்றும் நெருக்கடி விரைவு நடவடிக்கை மையம் மேற்கொண்டு வருவதாக சுகாதார அமைச்சு டிவிட்டர் பதிவுகளின் வழி தெரிவித்தது.
எதிர்காலத்தில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் நெருக்கடி நிலையை எதிர் கொள்வதற்காக இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சு கூறியது.
கடந்த ஏழு தினங்களில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 5,800 அல்லது 17 விழுக்காடாக அதிகரித்துள்ளதை சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கத்தின் தரவுகள் காட்டுகின்றன.