கோலாலம்பூர், நவ 17- அரச மலேசிய ஆகாயப்படைக்குச் சொந்தமான ஹாக் 108 ரக போர் விமானம் பட்டர்வெர்த்தில் உள்ள ஆகாயப் படைத் தளத்தின் ஓடுபாதையில் நேற்றிவு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அந்த விமானத்தின் விமானி கொல்லப்பட்ட நிலையில் மற்றொருவர் காயங்களுக்குள்ளானதாக ஆகாயப்படைத் தளபத்தியம் அறிக்கை ஒன்றில் கூறியது.
இந்த விபத்தில் கேப்டன் முகமது அப்பாண்டி புஸ்தாமி மரணமடைந்த வேளையில் மேஜர் ஃபாரீஸ் ஓமார் காயமுற்றார். பினாங்கு, செபராங் ஜெயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரின் உடல் நிலை சீராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்விரு விமானிகளும் இரவு நேர பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இரவு மணி 10.07 அளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக ஆகாயப் படையின் அந்த அறிக்கை தெரிவித்தது.
அவ்விரு விமானிகளும் திருமணமானவர்கள் என்றும் இவ்விபத்து குறித்த தகவல் அவர்களின் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அது கூறியது.
இவ்விபத்து குறித்து ஆருடங்களையோ உண்மைக்கு மாறான செய்திகளையோ வெளியிட வேண்டாம் என அனைத்து தரப்பினரும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பில் ஆகாயப் படை விசாரணைக்குழு ஒன்றை அமைக்கும் எனவும் அவ்றிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.