ஷா ஆலம், நவ 18- அடுத்தாண்டில் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 20வது சுக்மா போட்டிக்கான ஆட்ட அட்டவணைக்காக சிலாங்கூர் விளையாட்டு மன்றம் காத்திருக்கிறது
எனினும், இந்த போட்டியில் இடம் பெறும் 16 கட்டாய விளையாட்டுகளில் பங்கேற்பதற்கான முன்னேற்பாடுகளை தமது தரப்பு செய்து வருவதாக சிலாங்கூர் விளையாட்டு மன்றத்தின் நிர்வாக இயக்குநர் முகமது நிஸாம் மர்ஜூக்கி கூறினார்.
மொத்தம் 31 விளையாட்டுகளை உள்ளடக்கிய இந்த போட்டி ஜொகூரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த வேளையில் கோவிட்-19 பெருந் தொற்று தாக்கம் காரணமாக அது நடத்தப்படுவது சாத்தியமற்றதாக ஆனது என அவர் சொன்னார்.
அடுத்தாண்டு நடைபெறும் சுக்மா போட்டியில் எந்த வகையான ஆட்டங்களை நிலைநிறுத்துவது அல்லது தவிர்ப்பது என்பது குறித்து ஏற்பாட்டாளர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை என்று அவர் தெரிவித்தர்.
இதன் காரணமாக செயல் திட்டங்களை நம்மால் வரைய முடியவில்லை. ஆயினும், ரக்பி, குத்துச் சண்டை, குறி சுடுதல், பூப்பந்து, சீலாட் உள்ளிட்ட 16 கட்டாய விளையாட்டுகளில் பங்கேற்பதற்கு ஏதுவாக விளையாட்டாளர்களை தயார் செய்து வருகிறோம் என்றார் அவர்.
ஜொகூரில் நடத்தப்படவிருந்த சுக்மா போட்டி கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக 2024 ஆம் ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்படுவதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமது பைசால் அஸூமு கடந்த மாதம் 28 ஆம் தேதி கூறியிருந்தார்.