ஷா ஆலம், நவ 18- நாடு எண்டமிக் கட்டத்திற்கு மாறுவதற்கு தயராகும் வகையில் தெளிவான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (எஸ்.ஒ.பி.) மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோவிட்-19 நோய்த் தொற்றுடன் வாழ்வதற்குரிய பக்குவத்தை மக்களுக்கு ஏற்படுத்துவதற்கும் புதிய இயல்புடன் பழையை வாழ்க்கை முறையை பின்பற்றுவதற்கும் தெளிவான எஸ்.ஒ.பி. விதிமுறைகள் அவசியம் என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
எண்டமிக் என்றால் என்ன என்று மக்கள் புரிந்து கொண்டிருப்பதையும் நோய்த் தொற்றுக்கான அறிகுறி இருக்கும் பட்சத்தில் அதிலிருந்து மீள்வதற்கான வழிகளை அவர்கள் அறிந்திருப்பதையும் உறுதி செய்வது அவசியம் என்று அவர் சொன்னார்.
இப்போது எஸ்.ஒ.பி. விதிகள் சற்று கடுமையாக உள்ளன. உண்மையில் நாம் எண்டமிக் கட்டத்தில் அல்லாமல் பெண்டமிக் எனப்படும் பெருந்தொற்று கட்டத்தில் இருக்கிறோம் என்றார் அவர்.
2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு எண்டமிக் கட்டத்தை எதிர்கொள்வது தொடர்பில் டிவி சிலாங்கூர் நடத்திய கலந்துரையாடல் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இம்மாத இறுதியில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் குறித்து கருத்துரைத்த அவர், அந்த வரவு செலவுத் திட்டம் மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் கோவிட்-19 நோய்த் தொற்றின் பாதிப்பிலிருந்து மீள்வதற்கான வழிவகைகளைக் கொண்டதாகவும் இருக்கும் என்றார் அவர்.