கோலாலம்பூர், நவ 22- பொது இடங்களில் பாதுகாப்பாக நுழைவதை உறுதி செய்வதை நோக்கமாக கொண்ட செலங்கா செயலி கடந்தாண்டு மே மாதம் 4 ஆம் தேதி தொடங்கப்பட்டது முதல் இதுவரை 67 லட்சம் பேர் பயன்படுத்தியுள்ளனர்.
அந்த செயலியைப் பயன்படுத்துவோரில் 44 விழுக்காட்டினர் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று அதன் திட்ட இயக்குநர் டாக்டர் ஹெல்மி ஜக்காரியா கூறினார்.
எஞ்சியோர் மாநிலத்தின் இதரப் பகுதிகளையும் ஜொகூர் மற்றும் பினாங்கு போன்ற பிற மாநிலங்களையும் சேர்ந்தவர்கள் என அவர் குறிப்பிட்டார்.
இந்த செயலியை சிலாங்கூர் மாநிலத்திற்குள் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லாததால் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பல்வேறு நோக்கங்களுக்காக இதனை பயன்படுத்துகின்றனர் என்றார் அவர்.
அனைவரும் பயன்பெறுவதை நோக்கமாக கொண்ட சேஹாட் எனப்படும் சிலாங்கூர் மன நல ஆலோசக சேவையையும் இந்த செயலி வழி பலர் பயன்படுத்தினர் என்று அவர் சொன்னார்.
கோலாலம்பூரில் நேற்றுடன் முடிவுக்கு வந்த சிப்ஸ் 2021 எனப்படும் சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாட்டின் போது அவர் இதனைத் தெரிவித்தார்
கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வரும் மனநலப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த சேஹாட் மனநல ஆலோசகச் சேவைத் திட்டத்தை மாநில அரசு கடந்த ஆகஸ்டு மாதம் 30 ஆம் தேதி தொடக்கியது.