போர்ட்டிக்சன், நவ 23- போலீஸ்காரர்கள் போல் நடித்து ஆடவர் ஒருவரை வீடு புகுந்து கடத்திச் சென்று கொலை செய்ததாக இரு நபர்கள் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
43 மற்றும் 44 வயதுடைய அவ்விரு சந்தேகப் பேர்வழிகளும் போர்ட்டிக்சன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் இன்று குற்றஞ்சாட்டதாக என்று போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட். அய்டி ஷாம் முகமது கூறினார்.
இம்மாதம் 13ஆம் தேதி லுக்குட், பண்டார் ஸ்ப்ரிங்ஹில் பகுதியிலுள்ள வீட்டில் இருந்த அந்த ஆடவரை போலீஸ்காரர்கள் என தங்களை அடையாளம் கூறிக்கொண்ட இரு சந்தேகப்பேர்வழிகள் கடத்திச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பில் அவரின் மனைவில் போலீசில் புகார் செய்திருந்தார்.
தங்கள் வீட்டிற்கு வந்த இரு நபர்கள் தங்களை போலீஸ்காரர்கள் எனக் கூறிக் கொண்டு கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விசாரிக்கப் போவதாக கூறி தன் கணவரை அடித்து இழுத்துச் சென்றதாக அம்மாது தனது புகாரில் கூறியிருந்தார்.
அதே தினம் காலை 9.45 மணியளவில் தன் கணவர் இறந்து விட்டதை செலாயாங் மருத்துவமனையின் மருத்துவர் உறுதிப்படுத்தியதாக போலீசார் தம்மிடம் கூறினர் என அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, சம்பவம் நிகழ்ந்த மறுநாள் தலைநகர், தாமான் பூசாட் கெப்போங்கிலுள்ள வீடொன்றில் அவ்விரு சந்தேகப் பேர்வழிகளையும் போலீசார் கைது செய்தனர்.