ECONOMYHEALTHMEDIA STATEMENTSELANGOR

பொது சுகாதாரம் மீது 2022 பட்ஜெட் கூடுதல் கவனம் செலுத்தும்- டாக்டர் சித்தி மரியா நம்பிக்கை

ஷா ஆலம், நவ 23- சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக பொது சுகாதாரத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு வரும் 2022 வரவு செலவுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்படும் என்று தாம் எதிர்பார்ப்பதாக பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட்  கூறினார்.

இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டதை விட இரு மடங்கு அதிகத் தொகை 2022 வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அவர் சொன்னார்.

பொது சுகாதார நடவடிக்கைகளை மேலும் முறையாக மேற்கொள்வதற்கு இந்த கூடுதல் நிதி ஒதுக்கீடு உதவும் என நம்புகிறோம். குறிப்பாக, “சேஹாட“ எனப்படும் சிலாங்கூர் மனநலத் திட்டத்தை நாம் அமல்படுத்தியுள்ளோம். போதுமான அளவு நிதி இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நோயாளிகளை மனநல மருத்துவரிடம் அனுப்புவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்றார் அவர்.

அதே சமயம், கோவிட்-19 பிரச்சனையைக் களைவதற்கு “சுக்கா“ எனப்படும் சிலாங்கூர் சுகாதார சமூக தன்னார்வலர் அமைப்பு உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், மாநில சுகாதாரத் துறையுடன் ஒன்றுபட்டு செயல்டுவதற்கு ஏதுவாக அவ்வமைப்புக்கு உரிய பயிற்சியினை அளிக்க மானியம் தேவைப்படுகிறது என்றார்.

இங்குள்ள துன் ஊடா நூலகத்தில் செலாமாட் எனப்படும் குடும்ப வன்முறை தொடர்பான அவசர தொலைபேசி சேவையைத் தொடக்கி  வைத்தப்  பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இம்மாதம் 26 ஆம் தேதி வெள்ளிக் கிழமை மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்வார்.


Pengarang :