ஷா ஆலம், நவ 25- உமிழ்நீர் மூலம் சோதனை மேற்கொள்ளக்கூடிய கோவிட்-19 ஆண்டிஜென் (ஆர்.டி.கே.) கருவியை இனி வெ. 4.90 விலையில் வாங்க முடியும்.
தரத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் அந்த கருவியின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் ந ந்தா லிங்கி கூறினார்.
இதற்கு முன்னர் இக்கருவி அதன் ரகத்தை பொறுத்து வெ. 6.60 முதல் வெ. 6.90 வரை விற்கப்பட்டதாக அவர் சொன்னார்.
நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உயர்வாக இருந்து வருவதால் இந்த கருவி ஒவ்வொரு குடும்பத்தின் அன்றாடத் தேவையாக ஆகி விட்டது என அவர் குறிப்பிட்டார்.
அதிக அளவிலான பொருளாதார நடவடிக்கைகளும் பள்ளிகள், உயர்கல்விக் கூடங்கள் மற்றும் தொழில்துறைகளும் திறக்கப்பட்டு விட்டதால் இந்த சுயப்பரிசோதனைக் கருவி அத்தியாவசியமானதாக ஆகிவிட்டதோடு அடிக்கடி பயன்படுத்த வேண்டிய தேவையும் ஏற்பட்டு விட்டது என்றார் அவர்.
சுகாதார அமைச்சுடன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தரத்தில் சமரசம் செய்து கொள்ளாமல் சுயப் பரிசோதனை கருவியின் விலையைக் குறைக்க நான் இணக்கம் தெரிவித்துள்ளேன் என்று அவர் மேலும் சொன்னார்.