ஷா ஆலம், நவ 29- செபிந்தாஸ் எனப்படும் சிலாங்கூர் அடிப்படை தொழில்நுட்ப உபகரண இரவல் திட்டம் மாணவர்களுக்கு இரவல் முறையில் அல்லாமல் அவர்களிடம் நேரடியாக ஒப்படைக்கப்படும் வகையில் அமல்படுத்தப்பட வேண்டும் என்று ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு பெரும் பயனைத் தரக்கூடிய வகையில் இத்திட்டம் அமைந்துள்ளதாக பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினர் டோனி லியேங் தக் சீ கூறினார்.
தனது பண்டமாரான் தொகுதியில் தனியார் துறையின் ஒத்துழைப்புடன் 300 கணினிகளை தாம் விநியோகித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கு பயனளிக்கும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது. இந்த உபகரணங்களை இரவல் முறையில் அல்லாமல் அவர்கள் சொந்தமாக்கிக் கொள்ளும் வகையில் வழங்கினால் பயன்மிக்கதாக இருக்கும் என அவர் சொன்னார்.
இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 லட்சம் வெள்ளி போதுமானதாக இல்லை என்று லெம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினர் ஹனிசா தல்ஹா கூறினார். இந்தி நிதியைக் கொண்டு 500 மடிக்கணினிகளை மட்டுமே வாங்க முடியும். ஒவ்வொரு தொகுதிக்கும் எட்டு கணினிகள் மட்டுமே கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.
இந்த மாணவர் உதவித் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை மிகவும் குறைவானது. நமது எதிர்காலத் தலைமுறையினரின் நலனுக்காக கூடுதல் தொகை ஒதுக்கப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.
இதனிடையே, பி.டி.ஆர்.எஸ்.எனப்படும் டியூஷன் ராக்யாட் திட்டத்தை தொடரும் மாநில அரசின் முடிவை அவ்விரு சட்டமன்ற உறுப்பினர்களும் வரவேற்றனர். பெருந்தொற்று பரலால் பாதிக்கப்பட்டவர்கள் கல்வியைத் தொடர்வதில் இத்திட்டம் பெரிதும் துணை புரியும் என அவர்கள் தெரிவித்தனர்