கோலாலம்பூர், டிச 3– கிழக்கு கரை இரயில் திட்டத்தை (இ.சி.ஆர்.எல்.) வடக்கு வழித்தடத்தில் மேற்கொள்ளும் மத்திய அரசின் பரிந்துரையை சிலாங்கூர் மாநில அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
பத்து நீர்தேக்கம் அருகிலுள்ள நீர் பிடிப்பு பகுதி உள்ளிட்ட இடங்களில் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பாரம்பரிய மற்றும் பூர்வக்குடியினர் குடியிருப்புகளுக்கு ஏற்படக்கூடிய சமூக விளைவுகளை இத்திட்டம் கருத்தில் கொள்ளும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இரு மாநில ஆட்சிக்குழு கூட்டங்களில் இ.சி.ஆர்.எல். திட்டம் தொடர்பில் சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் நடத்திய விவாதம் தொடர்பான 37 அறிக்கைகளை தாங்கள் நன்கு ஆய்வு செய்ததாக அவர் சொன்னார்.
அந்த இரயில் திட்டத்தை வடக்கு வழித்தடத்தில் மேற்கொள்ளும் மத்திய அரசின் முடிவுக்கு ஒப்புதல் அளிக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது. மெந்தகாப் முதல் கோம்பாக் வரையிலான சி1 பிரிவு மற்றும் கோம்பாக்-செரண்டா- கோலக்கிள்ளானை உள்ளடக்கிய சி2 பிரிவை அங்கீகரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது என்றார் அவர்.
நேற்று இங்கு நடைபெற்ற செக்சன் சி (வடக்கு வழித்தடம்) நிர்மாணிப்பு தொடர்பான ஆவணங்களை மலேசியன் ரெயில் லிங்க் நிறுவனமும் சைனா கம்யூனிகேஷன் கன்ஸ்ட்ராக்ஷன் லிமிட ட் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங்கும் கலந்து கொண்டார்.