ஷா ஆலம், டிச 3- சிலாங்கூர் புத்தக விழா இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் நேற்று தொடங்கியது. இந்த விழாவின் முதல் நாளில் 1,500 க்கும் மேற்பட்டோர் வருகை புரிந்தனர்.
நேற்று பிற்பகல் 2.00 மணி வரை இந்த எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டதாக சிலாங்கூர் பொது கழகத்தின் இயக்குநர் டத்தின் படுகா மஸ்துரா முகமது கூறினார்.
இந்த புத்தக விழா 16 வது ஆண்டாக நடத்தப்படுகிறது. கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு வருமானம் ஈட்டுவதற்காக இங்கு வியாபாரம் புரிகின்றவர்கள் மற்றும் கண்காட்சிக் கூடங்களை அமைத்துள்ளவர்களுக்கு உதவும் வகையில் மேலும் அதிகமானோர் இந்த கண்காட்சிக்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் சொன்னார்.
இந்த புத்தக விழாவுக்கு வர முடியாதவர்களுக்கு உதவும் வகையில் ஷோப்பி மற்றும் செல்டேக் எனப்படும் சிலாங்கூர் இலக்கவியல் மின் விநியோக ஒருங்கமைப்பு தளங்களை தயார் செய்துள்ளோம். வணிகர்களுக்கு உதவும் அதே வேளையில் மக்கள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதும் எங்களின் நோக்கமாகும் என்றார் அவர்.
இந்த புத்தக விழாவை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் பப்ஜி போன்ற இணைய விளையாட்டுகளையும் தாங்கள் ஏற்பாடு செய்துள்ளதாக கூறிய அவர், இப்போட்டிகளில் வெல்வதன் மூலம் 8,000 வெள்ளி மதிப்பிலான பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்பும் உள்ளதாக சொன்னார்.
இந்த புத்தக விழா வரும் 12 ஆம் தேதி வரை 11 நாட்களுக்கு நடைபெறும். தினசரி காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10.00 மணி வரையிலும் இந்த இந்த விழா திறந்திருக்கும்.