ஷா ஆலம், டிச 4- கடந்த 2019 ஆம் ஆண்டு யு.பி.எஸ்.ஆர். தேர்வில் சிறப்பான அடைவு நிலையைப் பதிவு செய்த சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த 337 மாணவர்கள் மாநில அரசினால் வெகுமதி வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்தேர்வில் 8ஏ பெற்ற 101 மாணவர்களுக்கு 200 வெள்ளியும் 7ஏ பெற்ற 113 மாணவர்களுக்கு 150 வெள்ளியும் 6ஏ பெற்ற 123 மாணவர்களுக்கு 100 வெள்ளியும் வழங்கப்பட்டதாக சமூக மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.
இந்த நிகழ்வின் வழி யு.பி.எஸ்.ஆர். மாணவர்களை கௌரவிப்பதற்கு மாநில அரசு 49,450 வெள்ளியைச் செலவிட்டுள்ளது. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக ஈராண்டுகாலத் தாமதத்திற்குப் பின்னர் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது என்று அவர் சொன்னார்.
சாதனை படைத்த தமிழ்ப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரை பாராட்டும் நோக்கில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இந்த நிகழ்வை மாநில அரசு நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் ஜாலான் ஆக்கோப் தமிழ்ப்பள்ளியின் முன்னால் தலைமை ஆசிரியர் முனைவர் ஆர். ராமசாமி, கோலக்கிள்ளான் வாட்சன் தமிழ்ப்பள்ளியின் முன்னால் தலைமை ஆசிரியர் கே.சந்திராதேவி, கோலசிலாங்கூர் சுங்கை திராப் தமிழ்ப்பள்ளியின் முன்னால் தலைமை ஆசிரியர் எல்.பாலசுந்தரம் ஆகியோர் தோக்கோ குரு விருது வழங்கி கௌரவிக்கப் பட்டதோடு அவர்களுக்கு சன்மானமும் வழங்கப்பட்டது.
மேலும் இரு முன்னால் தலைமை ஆசிரியர்கள் திரு. பச்சியப்பன், மற்றும் செல்லையா பழனி ஆகியோர்களின் சார்பில் குடும்ப உறுப்பினர்கள் கௌரவிப்பை ஏற்றுக் கொண்டனர்.
சிறந்த பள்ளிகளுக்கான பிரிவில் முதலிடம் பிடித்த சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளிக்கு 10,000 வெள்ளியும் இரண்டாம் இடத்தை பிடித்த காஜாங் தமிழ்ப்பள்ளிக்கு 6,000 வெள்ளியும் பூச்சோங் தமிழ்ப்பள்ளிக்கு 4,000 வெள்ளியும் வழங்கப்பட்டன.