ஷா ஆலம், டிச, 5- சிலாங்கூர் மாநிலத்தில் ஆரம்பப் பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட கோவிட்-19 சம்பவங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு புதன்கிழமையும் ஆரம்பப் பள்ளி மாணவர்களிடம் நடத்தப்படும் கோவிட்-19 சோதனையின் அடிப்படையில் இந்த விபரங்கள் கிடைக்கப்பெற்றதாக மாநில கல்வி இயக்குநர் அனிஸ்மா எம். நோ கூறினார். புதன்கிழமைகளில் நடத்தப்படும் சோதனைகளில் ஓருவர் அல்லது இருவருக்கு மட்டுமே நோய்த் தொற்று கண்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார். மாணவர்கள் மத்தியில் நோய்த் தொற்று கண்டுபிடிக்கப்பட்டாலும் அது குறைந்த எண்ணிக்கையிலே உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு எஸ்.ஒ.பி. விதிகளின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார் அவர். சிலாங்கூர் மாநிலத்தில் சுமார் 600 ஆரம்பப் பள்ளிகள் உள்ளன. ஓவ்வொரு பள்ளியிலும் சராசரி 400 மாணவர்கள் பயில்கின்றனர். அவர்களில் குறைந்தது 10 விழுக்காட்டு மாணவர்களை தோராயமாக பரிசோதிக்க வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டார். இச்சோதனையில் உடல் நலக் குறைவு உள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக கூறிய அவர், இத்தகைய மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகின்றனர் என அவர் தெரிவித்தார்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2020/10/PKPB-Selangor-960x639.jpg)