ஷா ஆலம், டிச 6- மலேசிய பிரஜைகள் சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கான வயது வரம்பை 21 லிருந்து 18 ஆக குறைக்கும் 2021 ஆம் ஆண்டு சட்டம் (திருத்தம் செய்யப்பட்டது) சிலாங்கூர் அரசின் அமைப்புச் சட்ட மசோதா இன்று மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அவையில் நடைபெற்ற வாக்களிப்பின் போது உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவு கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து இந்த சட்டத்திருத்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்த சட்டத்திருத்தத்திற்கு ஆதவளித்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகருக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்போர் மற்றும் தேந்தெடுக்கப்படுவோரின் வயது வரம்பு தொடர்பான சட்டப்பிரிவு 63ஐ திருத்தும் விவாதத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.
நாம் திருத்தம் செய்யாவிட்டாலும்கூட மத்திய அரசு இந்த விதிகளை நிச்சயமாக அமல்படுத்த இயலும். எனினும் நமது ஒற்றுமையை புலப்படுத்தும் விதமாக இந்த சட்டத் திருத்தத்திற்கு ஆதரவளித்து ஏற்றுக் கொள்வது நமது கடமையாகும் . ஏறக்குறைய அனைத்து மாநிலங்களும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளன. குறிப்பாக, பேராக் மற்றும் பெர்லிஸ் ஆகிய மாநிலங்களை இந்த சட்டத் திருத்தத்தை நிறைவேற்றி அடுத்தாண்டில் அமல்படுத்தவுள்ளன என்றார் அவர்.
இதனிடையே, கூட்டத் தொடருக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் இங் சுயி லிம், இந்த சட்டத் திருத்தம் மாநிலத்திற்கு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.
அடுத்த தேர்தலில் நமது இளைய தலைமுறையினர் போட்டியிடுவதற்குரிய அங்கீகாரத்தை இந்த சட்டத்திருத்தம் வழங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.