ஷா ஆலம், டிச 7- அடுத்த ஐந்தாண்டுகளில் செல்டேக் எனப்படும் சிலாங்கூர் இலக்கவியல் மின்-விநியோகத் திட்டத்தில் பத்தாயிரம் சிறு மற்றும் குறு தொழில்முனைவோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இலக்கை அடைவதற்காக ஊராட்சி மன்றங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுடன் தாங்கள் ஒத்துழைப்பை நல்கி வருவதாக செல்கேட் வர்த்தக மேம்பாட்டு பிரிவின் தலைமை நிர்வாகி முகமது பவுசான் எல்ஹாம் கூறினார்.
சிலாங்கூர், விவசாய மேப்பாட்டுக் கழகம், ஹிஜ்ரா சிலாங்கூர், தொழில் முனைவோர் சங்கங்கள் ஆகியவை இத்திட்டத்தில் பங்கேற்றுள்ள துறைகளாகும் என்று அவர் சொன்னார்.
இவ்வாண்டில் இரண்டாயிரம் தொழில்முனைவோரை இத்திட்டத்தில் சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதுவரை 1,200 பேர் இதில் பதிவு செய்துள்ளனர் என்றார் அவர்.
இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் நடைபெற்று வரும் 2021 சிலாங்கூர் புத்தக விழாவில் நேற்று நடைபெற்ற செல்டேக் மின்.வணிகம் வழி இலக்கவியலை நோக்கி தொழில்முனைவோர் எனும் திட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
போதுமான அளவு விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகள் இல்லாத காரணத்தால் புறநகர் தொழில்முனைவோரை இத்திட்டத்தில் சேர்ப்பது கடினமானப் பணியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.