ஷா ஆலம், டிச 8- செல்வேக்ஸ் திட்டத்திற்கு கொள்முதல் செய்யப்பட்ட தடுப்பூசிகளை உற்பத்தியாளர்கள் உத்தரவாதம் அளித்துள்ளபடி கொள்முதல் செய்த தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியும் என சிலாங்கூர் அரசு நம்பிக்கை கொண்டுள்ளது.
தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்நோக்கும் இதர மாநிலங்கள் அல்லது நாடுகளுக்கும் இந்த தடுப்பூசியை விற்க முடியும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
எனினும், தற்போதைக்கு செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்தின் கீழ் ஊக்கத் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவதில் மாநில அரசு கவனம் செலுத்தி வருவதாக அவர் சொன்னார்.
செல்வேக்ஸ் ரெமாஜா, செல்வேக்ஸ் கம்யூனிட்டி, செல்வேக்ஸ் பெர்கெராக் திட்டங்களுக்குப் பிறகு ஊக்கத் தடுப்பூசியை இலவசமாக வழங்கும் முதல் மாநிலமாக சிலாங்கூர் விளங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும், நடப்பு கோவிட்-19 நிலவரங்களைக் கருத்தில் கொண்டு தடுப்பூசியை விற்பதா? அல்லது சேமித்து வைப்பதா? என்பது குறித்து காலத்திற்கு ஏற்றவாறு யோசித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது என்றார் அவர்.
மாநில சட்டமன்றத்தில் இன்று செல்வேக்ஸ் இண்டஸ்ட்ரிஸ் திட்டத்திற்கான தடுப்பூசி கையிருப்பை தீர்ப்பது தொடர்பில் மாநில அரசு கொண்டுள்ள வியூகங்கள் குறித்து புக்கிட் காசிங் உறுப்பினர் ஆர்.ராஜீவ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.