கோலாலம்பூர், டிச 9- நாட்டில் நேற்று கோவிட்-19 நோய்த் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை 5,020 ஆக உயர்வு கண்டது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 4,965 ஆக இருந்தது.
நேற்று பதிவான 5,020 சம்பவங்களில் 98.3 விழுக்காடு அல்லது 4,933 சம்பவங்கள் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவையாகும். எஞ்சிய 1.7 விழுக்காடு அல்லது 87 சம்பவங்கள் மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட பாதிப்பை கொண்டுள்ளன.
நேற்று 4,525 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாகாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
இந்த புதிய எண்ணிக்கையுடன் சேர்த்து இந்நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 81 ஆயிரத்து 395 பேராக உயர்ந்துள்ளதாக அவர் சொன்னார்.
நோய்த் தொற்றுக்கு ஆளான மேலும் 359 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் 159 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நேற்று புதிதாக 13 தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டன. இதன் மூலம் நாட்டில் தீவிரமாக உள்ள தொற்று மையங்களின் எண்ணிக்கை 245 ஆக உயர்ந்துள்ளது.