ஷா ஆலம், டிச 9- சிலாங்கூர் அரசின் மேமோசெல் எனப்படும் இலவச மார்பக புற்றுநோய் சோதனை திட்டத்தின் வழி கடந்த 2010 முதல் மாநிலத்திலுள்ள 53,364 மகளிர் பயன் பெற்றுள்ளனர்.
இத்திட்டதின் மூலம் பயன்பெற்றவர்களில் 29,225 பேருடன் மலாய் சமூகத்தினர் முதலிடம் வகிப்பதாக பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
மலாய்க்காரர்களுக்கு அடுத்த நிலையில் 17,616 சீனர்களும் 6,360 இந்தியர்களும் இத்திட்டத்தின் வாயிலாக மார்பக புற்றுநோய் சோதனையை மேற்கொண்டதாக அவர் சொன்னார்.
ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் மத்தியில் மார்பக புற்றுநோய்க்கான அபாயம் அதிகமாகவும் 35 முதல் 50 வயது வரையிலானவர்கள் மத்தியில் மிதமாகவும் உள்ளதாக மலேசிய மருத்துவ சங்கத்தின் ஆய்வுகள் கூறுகின்றன என்று அவர் சொன்னார்.
இது தவிர, தற்போது பயோப்ஸி முறையின் வாயிலாக இந்த சோதனை மேம்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 2,500 வெள்ளி செலவு பிடிக்கக்கூடிய இத்திட்டத்திற்கு உண்டாகும் செலவை மாநில அரசே ஏற்றுக் கொள்கிறது என்றார் அவர்.
மாநில சட்டமன்றத்தில் இன்று மேமோசெல் திட்டத்தின் மேம்பாடுகள் குறித்து பெர்மாத்தாங் உறுப்பினர் ரோசான ஜைனால் அபிடின் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த மோமேகிராம் சோதனையை மேற்கொள்ள விரும்புவோர் https://sks.yawas.my. என்ற அகப்பக்கம் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.