ஷா ஆலம், டிச 9- சிலாங்கூர் அரசின் இலவச ஊக்கத் தடுப்பூசியைப் பெற விரும்புவோர் செலங்கா செயலியில் பற்றுச் சீட்டு குறியீட்டை பயன்படுத்தி முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்திற்கு நேற்று தொடங்கி அபரிமித ஆதரவு கிடைத்து வருவதைத் தொடர்ந்து இந்த புதிய விதிமுறை அமல்படுத்தப்படுவதாக பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
இத்திட்டத்தின் முதல் நாளான நேற்று தொடங்கி செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆகவே, தடுப்பூசி பெற நேரில் வரும் நடைமுறை நிறுத்தப்படுகிறது என்று அவர் சொன்னார்.
ஊக்கத் தடுப்பூசியை பெற விரும்பும் சிலாங்கூர்வாசிகள் வருகைக்கான முன்பதிவை பெறுவதற்காக செலங்கா செயலியில் பற்றுச்சீட்டு குறியீட்டைப் பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.
மாநிலத்திலுள்ள அனைத்து செல்கேர் கிளினிக்குகளிலும் ஊக்கத் தடுப்பூசி பெறுவோரின் தினசரி எண்ணிக்கை 150 ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்பதிவுக்கான வழி முறைகள் மற்றும் பற்றுச் சீட்டு குறியீட்டை https://bit.ly/selvaxb. என்ற அகப்பக்கம் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.
செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்தின் வாயிலாக 157,000 ஊக்கத் தடுப்பூசிகள் சிலாங்கூர் மாநில மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று முன்தினம் கூறியிருந்தார்.