ஷா ஆலம், டிச 10- கடந்த மாதம் 26 ஆம் தேதி தொடங்கி பத்து நாட்களுக்கு நடைபெற்ற சிலாங்கூர் சட்டமன்றத்தின் நான்காம் தவணைக்கான இரண்டாம் கூட்டத் தொடர் நேற்று ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த கூட்டத் தொடர் சீராகவும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆக்ககரமான பங்கேற்புடனும் நடைபெற்றதாக சட்டமன்ற சபாநாயகர் இங் சுயி லிம் கூறினார்.
விவாதத்தின் போது அவர்கள் பயன்மிக்க கருத்துகளையும் பரிந்துரைகளையும் முன்வைத்தனர். தீர்மானங்கள் நிறைவேற்றம் கண்டது குறித்தும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஜனநாயக நடைமுறையில் விவாதத்தின் போது நிகழ்ந்த கருத்து மோதல்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றே என அவர் சொன்னார்.
அவை உறுப்பினர்களின் இந்த எடுத்துக்காட்டு இனி வரும் காலங்களிலும் தொடர வேண்டும் என்பது தமது எதிர்பார்ப்பாகும் என்றார் அவர்.
கடந்த மாதம் 26 ஆம் தேதி மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்துடன் இந்த கூட்டத் தொடர் தொடங்கியது.