ஷா ஆலம், டிச 12- இன்று இரவுடன் முடிவுக்கு வரவிருந்த சாலைக் குற்றங்களுக்கான அபராதத் கழிவுத் திட்டம் இம்மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படவுள்ளது.
நிலுவையில் உள்ள குற்றப்பதிவுகளுக்கான அபராதத் தொகையை பொதுமக்கள் செலுத்துவதை உறுதி செய்வதற்கு ஏதுவாக இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் (ஐ.ஜி.பி.) டத்தோஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா கூறினார்.
இந்த அபராதத் தொகை கழிவுத் திட்டத்திற்கு மாவட்ட மற்றும் மாநில போலீஸ் நிலையங்களில் உள்ள அபராதம் செலுத்தும் முகப்பிடங்களில் அதிகமானோர் கூடி வருவதோடு இத்திட்டத்திற்கும் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு இத்திட்டத்திற்கான காலக்கெடுவை நீட்டிக்க முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.
இதுவரை 23 லட்சம் பேர் தங்கள் அபராதத் தொகையை செலுத்தியுள்ளனர் என்று இன்று தலைநகரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட குற்றப்பதிவுகளுக்கு 80 விழுக்காடு வரை கழிவு அல்லது குறைந்த பட்சம் 30 வெள்ளி அபராதம் விதிக்கும் சலுகை திட்டம் டிசம்பர் 9 முதல் 12ஆம் தேதி வரை அமல்படுத்தப்படும் என்று போலீசார் கூறியிருந்தனர்.