கோலாலம்பூர், டிச 13-கோவிட்-19 எண்ணிக்கை நேற்று 3,490 ஆகக் குறைந்து. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 4,626 ஆக இருந்தது. இந்த புதிய தொற்றுடன் சேர்த்து நாட்டில் நோய்த் தொற்றினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 91ஆயிரத்து 639 ஆக உயர்ந்துள்ளது. மொத்த சம்பவங்களில் 2.0 விழுக்காடு அல்லது 69 மூன்றாம்,நான்காம் மற்றும் ஜந்தாம் கட்டப் பாதிப்பை எதிர் நோக்கியுள்ள நிலையில் 3,421 பேர் அல்லது 98 விழுக்காட்டினர் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் டத்தோஸ்ரீ நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். கோவிட்-19 நோயாளிகளில் 407 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், 216 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். நேற்று பதிவான மொத்த சம்பவங்களில் 3,476 உள்ளூரில் பரவியவையாகும். எஞ்சிய 14 சம்பவங்கள் இறக்குமதியானவையாகும். நேற்று புதிதாக 2 தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டன. இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து தொற்று மையங்களின் எண்ணிக்கை 243 ஆக அதிகரித்துள்ளது.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2020/10/FW1084273_PTJ08_03102020_KKM_BN202010021249-960x675.jpg)