ஷா ஆலம், டிச 13- நேற்றுடன் முடிவுக்கு வந்த சிலாங்கூர் புத்தக விழா 2021 கடுமையான எஸ்.ஒ.பி. விதிமுறைகளுக்கு மத்தியிலும் பொதுமக்களிடமிருந்து அமோக ஆதரவைப் பெற்றுள்ளது.
இந்த விழாவில் கடந்தாண்டைக் காட்டிலும் இவ்வாண்டு அதிக புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக சிலாங்கூர் பொது நூலகக் கழகத்தின் இயக்குநர் டத்தின் படுகா மஸ்துரா முகமது கூறினார்.
கடந்த காலங்களில் நடைபெற்ற இந்த புத்தக விழாவின் போது 11 நாட்களில் ஐந்து லட்சம் பேர் வருகை புரிந்தனர். எனினும், கடுமையான எஸ்.ஒ.பி. விதிமுறைகள் காரணமாக இம்முறை இந்த எண்ணிக்கை வீழ்ச்சி கண்டுள்ளது என்றார் அவர்.
வருகையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இல்லாத போதிலும் வழக்கத்தை விட இம்முறை புத்தகங்களின் விற்பனை 50 விழுக்காடு அதிகரித்துள்ளதாக இந்த கண்காட்சியில் கலந்து கொண்ட புத்தக விற்பனையாளர்கள் கூறினர் என்று அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் கடந்த பதினோரு நாட்கள் நடைபெற்ற இந்த புத்தக விழா நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இங்குள்ள 152 விற்பனைக் கூடங்களில் சுமார் இரண்டு லட்சம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் எழுத்துப் படைப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.