கோலாலம்பூர், டிச 14- நாட்டில் நேற்று பதிவான 3,504 கோவிட்-19 சம்பவங்களில் 97.8 விழுக்காடு அல்லது 3,428 சம்பவங்கள் குறைந்த நோய்த் தாக்கம் கொண்ட ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்ட பாதிப்பைக் கொண்டவையாகும்.
எஞ்சிய 2.2 விழுக்காடு அல்லது 76 சம்பவங்கள் கடுமையான பாதிப்பைக் கொண்ட மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தைச் சேர்ந்தவையாகும் என்று சுகாகாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
இது தவிர, 408 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் 206 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது என்று நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
இந்நோய்த் தொற்றிலிருந்து 4,402 பேர் நேற்று குணமடைந்தனர், இதனுடன் சேர்த்து நோய்த் தொற்றிலிருந்து முற்றாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 6 ஆயிரத்து 309 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று புதிதாக 246 நோய்த் தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தீவிரமாக உள்ள தொற்று மையங்களின் எண்ணிக்கை 6,043 ஆக உயர்ந்துள்ளது என நோர் ஹிஷாம் சொன்னார்.