சுபாங் ஜெயா, டிச 15- லீமாஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய மற்றும் தோ சமயங்களுக்கான சிறப்பு செயல்குழு வாயிலாக கிறிஸ்துவ அமைப்புகளுக்கு 649,860 வெள்ளி மானியம் வழங்கப்பட்டது.
வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு மூன்று முக்கிய அமைப்புகளுக்கு 240,000 வெள்ளி வழங்கப்படுவதாக அந்த செயல்குழுவின் இணைத் தலைவர் ஹீ லோய் சியான் கூறினார்.
இது தவிர கத்தோலிக்க தேவாலயம், மலேசிய தேவாலய மன்றம் மற்றும் மலேசிய தேசிய இவெங்லிக்கள் கிறிஸ்துவ சகோதரத்துவ அமைப்பு ஆகியவற்றுக்கு தலா 80,000 வெள்ளி வழங்கப்படுவதாக அவர் மேலும் சொன்னார்.
இந்த மானியத்தில் 311,860 வெள்ளி சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் நேற்று வழங்கப்பட்ட வேளையில் எஞ்சிய தொகை ஏற்கனவே வழங்கப்பட்டது என்று நேற்று இங்கு மாநில நிலையிலான கிறிஸ்துஸ் தின விழாவை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, வசதி குறைந்த முஸ்லீம் அல்லாதோரின் நல்லடக்கச் சடங்கை மேற்கொள்வதில் உதவும் வகையில் இடுகாடு தொடர்பான கொள்கைளில் மாநில அரசு மாற்றத்தைக் கொண்டு வரவுள்ளதாக சுற்றுலாத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான ஹீ லோய் சியான் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் இத்தகைய நல்லடக்கச் சடங்குகளை தனியார் மேற்கொண்டு வந்தனர். அதற்கான கட்டணத்தை வசதி குறைந்தவர்களால் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. நல்லடக்க சடங்கை நடத்துவதற்கு ஆயிரக்கணக்கான வெள்ளியைச் செலவிட வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது என்றார் அவர்.
எதிர்காலத்தில் இத்தகைய நல்லடக்கப் பணிகளை ஊராட்சி மன்றங்களே ஏற்று நடத்த வேண்டும் என விரும்புகிறோம். இந்நோக்கத்திற்காக நிலங்களை மாநில அரசு வழங்கும் என்றார் அவர்.