பந்திங், டிச 17- இங்கு செயல்பட்டு வரும் சிலாங்கூர் மனவளர்ச்சி குன்றிய சிறார் பராமரிப்பு சங்கத்திற்கு மாநில அரசு 45,800 வெள்ளி மானியம் வழங்கியுள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்று பரவியது முதல் இந்த காப்பகத்தை நடத்துவதில் பொருளாதார ரீதியாக சிரமத்தை எதிர்நோக்கி வந்த அச்சங்கத்தினருக்கு மாநில அரசின் இந்த உதவி பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
நோய்த் தொற்று பரவலுக்குப் பின்னர் நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளிடமிருந்து நிதியுதவி கிடைப்பதில் சுணக்கம் ஏற்பட்டதாக அச்சங்கத்தின் தலைவர் எஸ். முருகையா @ ஜீவா கூறினார்.
தக்க சமயத்தில் நிதியுதவி வழங்கி இந்த காப்பகத்தின் அன்றாட நடவடிக்கைகள் சீராக நடைபெறுவதற்கு உதவிய சிலாங்கூர் மாநில அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் சொன்னார்.
இங்குள்ள சிலாங்கூர் மன வளர்ச்சி குன்றிய சிறார் பராமரிப்பு சங்க காப்பகத்தில் நேற்று நடைபெற்ற 2021 சிலாங்கூர் நீடித்த சமூக நலத் திட்ட நிகழ்வின் போது முருகையா இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் சமூக நலத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவிடமிருந்து இச்சங்கம் 45,800 வெள்ளி மானியத்தைப் பெற்றுக் கொண்டது.
கடந்த 1996 ஆம் ஆண்டில் அம்பாங்கில் தொடங்கப்பட்ட இந்த சிறார் பராமரிப்பு சங்கம் 2012 ஆம் ஆண்டில் பந்திங் நகருக்கு மாற்றலானது.
இந்த பராமரிப்பு மையத்தில் உள்ள 78 மன வளர்ச்சி குன்றிய சிறார்களைப் பராமரிக்கும் பணியில் 28 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.