ஷா ஆலம், டிச 17- சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு மையத்தில் பணிகள் நிறுத்தப்பட்டதால் பாதிப்புக்குள்ளான 463 பகுதிகளில் திட்டமிட்டப்பட்டதைக் காட்டிலும் முன்கூட்டியே நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று நண்பகல் 12.00 மணி வரை 92 விழுக்காட்டுப் பகுதிகளில் நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பியதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.
குடியிருப்பு பகுதி அமைந்துள்ள இடம் மற்றும் தொலைவைப் பொறுத்து நீர் விநியோக நேரம் மாறுபடும் என்று அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.
பாதிக்கப்பட்ட அனைத்து 463 இடங்களிலும் இன்றிரவு 11.30 மணிக்குள் நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பிய பகுதிகளில் வசிப்பவர்கள் இதர இடங்களில் நீர் விநியோகம் விரைவாக சீரடைவதற்கு ஏதுவாக நீரை சிக்கனமாக பயன்படுத்தும்படியும் அந்நிறுவனம் கேட்டுக் கொண்டது.
நீர் விநியோகம் தொடர்பான தகவல்களை அறிய விரும்புவோர் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் 15300 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.