ஷா ஆலம், டிச. 22 – இன்று அதிகாலை ஷா ஆலமைச் சுற்றி பலத்த மழை பெய்தாலும், இங்குள்ள தாமான ஸ்ரீ மூடா, செக்சன் 25ல் உள்ள வெள்ளநீரை வெளியேற்றும் பணி இன்னும் சீராக நடந்து வருகிறது.
“அதிகாலை 4 மணிக்கு மழை பெய்தாலும் தண்ணீர் குறைந்துவிட்டது” என்று தேசிய பேரிடர் மேலாண்மை முகமை (நட்மா) இயக்குநர் ஜெனரல் டத்தோ அமினுடின் ஹாசிம் பெர்னாமாவிடம் இன்று தெரிவித்தார். செவ்வாய்கிழமை அதிகாலை ஆரம்பிக்கப்பட்ட வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கையின் அபிவிருத்தி தொடர்பில் கருத்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நேற்று, பிரதமர் துறையின் (சிறப்புப் பணிகள்) அமைச்சர் டத்தோ டாக்டர் அப்துல் லத்தீஃப் அஹ்மட், தாமன் ஸ்ரீ மூடாவில் 80 சதவீத வெள்ள நீர் சுங்கை கிள்ளாங்கில் வெளியேற்றப் பட்டதாகக் கூறினார்.
“17 மணி நேரத்தில் 80 சதவீதத்தை வெளியேற்ற முடிந்தால், தர்க்கரீதியாக, மழை பெய்யவில்லை என்றால், மீதமுள்ள 20 சதவீதத்தை நாளை காலைக்குள் முற்றாக வெளியேற்ற முடியும்,” என்று அவர் கூறினார்.