ஷா ஆலம், டிச 23 - இம்மாதம் 17 ஆம் தேதி காலை முதல் இடைவிடாது பெய்த மழையால் ஷா ஆலமில் உள்ள தாமான் ஸ்ரீ மூடாவில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் இன்று அதிகாலையில் முழுமையாகக் வடிந்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகள் இன்று தொடங்கும் தனது டிவிட்டர் பதிவில் அவர் சொன்னார். இன்று அதிகாலையில் நீர் மட்டம் முழுமையாக குறைந்துவிட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்யும் பணியும் இன்று தொடங்கும் என்று அவர் சுருக்கமான அந்த டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, ஷா ஆலம் சுற்று வட்டாரத்தில் கனத்த மழை பெய்தாலும் இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடா, செக்சன் 25 இல் வெள்ள நீரை வெளியேற்றும் பணி சீராக நடைபெற்று வருவதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் (நட்மா) தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் அமினுடின் ஹாசிம் தெரிவித்தார். ஸ்ரீ மூடா வெள்ள நிலவரம் குறித்து கருத்துரைத்த பிரதமர் துறையின் (சிறப்புப் பணிகள்) அமைச்சர் டத்தோ டாக்டர் அப்துல் லத்தீப் அகமது, அப்பகுதியில் 80 விழுக்காட்டிற்கும் மேல் வெள்ள நீர் கிள்ளான் ஆற்றில் வெளியேற்றப்பட்டதாகக் கூறினார்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2021/12/FW1216304_SG41_22122021_TINJAUAN-1536x1024-1-960x640.jpg)