ஷா ஆலம், டிச 24- அடுத்தாண்டில் வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு சிலாங்கூர் மாநில அரசு 6 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மாநிலத்தில் நீண்ட கால அடிப்படையில் வெள்ளப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக அவர் சொன்னார்.
இவ்வாண்டைப் போலவே வரும் 2022 ஆம் ஆண்டிற்கும் வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்கு 6 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக இவ்வாண்டிற்கான ஒதுக்கீட்டில் 4 கோடி வெள்ளி முதல் 4.5 கோடி வெள்ளி வரை மட்டுமே செலவிடப்பட்டது என்றார் அவர்.
இவ்வாண்டிற்கான ஒதுக்கீட்டில் மேலும் 4 கோடி வெள்ளியை அதிகரித்துள்ளோம். அத்தொகை யாவும் நீண்ட காலத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.
சிலாங்கூரில் வெள்ள நிலவரம் தொடர்பில் பெர்னாமா வானொலிக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்தார்.