ஷா ஆலம், டிச 24- வெளியிலிருந்து வரும் உதவிகள் முறையாக இருப்பதை உறுதி செய்வதற்காக அவை ஒருங்கிணைக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
வார இறுதியில் உதவிகள் வருவது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் அவற்றை ஒருங்கிணைக்கும் பணியில் இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினரும் மாவட்ட அதிகாரிகளும் ஈடுபடுவர் என்று அவர் சொன்னார்.
வெளியிலிருந்து உதவிக்காக வருவோர் முன்கூட்டியே தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். இதன் மூலம் உதவித் திட்டத்தை ஒருங்கிணைக்க முடியும். நேற்று உலு லங்காட்டில் அதிகமானோர் உதவி வழங்குவதற்காக கூடியதால் அங்கு நெரிசல் ஏற்பட்டது என்றார் அவர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நெரிசலும் அசௌகர்யமும் ஏற்படுவதை தவிர்க்க உதவித் திட்டத்தை ஒருங்கிணைக்கும்படி இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினரையும் மாவட்ட அதிகாரிகளையும் பணித்துள்ளேன். உதவிக்கு வருவோரை தடுப்பது எங்கள் நோக்கமல்ல. மாறாக, மனித ஆற்றல் வீணாவதை தடுக்க இந்நடவடிக்கை அவசியமாகிறது என்று அவர் மேலும் சொன்னார்.