கோல லங்காட், டிச 26- மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 1,000 வெள்ளி உதவித்தொகை ஜனவரி இறுதிக்குள் வழங்கப்படும் என்று மந்திரி புசார் கூறினார். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உடனடி உதவிகளைப் பெறுவதை உறுதி செய்யும் வகையில் விண்ணப்பம் செய்வதற்கான எளிய முறை நாளை அறிவிக்கப்படும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்றும் பணி முழுமையடைந்துள்ளது. இப்போது சுத்தம் செய்வது மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகளோடு உணவு விநியோகமும் இன்னும் தொடர்கிறது. எனவே இந்த மாதம் 1,000 வெள்ளி நிதியுதவி வழங்குவது நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இப்பணிகள் அனைத்தும் ஜனவரி இறுதியில் முழுமை பெறும் என்று அவர் கூறினார். தாமான் லங்காட் உத்தாமா அர் ரஹ்மான் பள்ளிவாசல், அல்-குரான் வகுப்பு மற்றும் ஃபர்டு ஐன் புக்கிட் சாங்காங் இளைஞர் நிலத் திட்ட ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் வெள்ளத்திற்குப் பிந்தைய நிலைமையை ஆய்வு செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். கடந்த வாரம் பல மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளச் சம்பவங்களைத் தொடர்ந்து 10 கோடி வெள்ளி நிதியில் சிலாங்கூர் பாங்கிட் திட்டத்தை மாநில அரசு கடந்த செவ்வாய்க்கிழை அறிவித்தது.