ஷா ஆலம், டிச 27- வெள்ளம் பாதித்த இடங்களில் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்கு டீம் சிலாங்கூர் தன்னார்வலர் குழுவில் நேற்று வரை 400 பேர் வரை இணைந்துள்ளனர்.
சமூக சேவையில் ஈடுபாடும் ஆரோக்கியமான உடல் நிலையும் கொண்டவர்கள் இந்த குழுவில் இணைந்து பணியாற்ற அழைக்கப்படுவதாக டீம் சிலாங்கூர் செயலகத்தின் தலைவர் ஷியாஹய்செல் கெமான் கூறினார்.
சிலாங்கூர் எப்.ஏ. மற்றும் சிலாங்கூர் எப்.சி. கால்பந்து குழுக்களிடமிருந்தும் தன்னார்லவர்களின் பங்கேற்பை டீம் சிலாங்கூர் பெற்றுள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மேலும் அதிகமான பொதுமக்களின் பங்கேற்பை அக்குழு எதிர்பார்க்கிறது என்று அவர் சொன்னார்.
பெக்காவானிஸ் எனப்படும் சிலாங்கூர் மகளிர் சமூக நல அமைப்பின் ஒத்துழைப்புடன் இங்குள்ள கம்போங் லொம்போங்கில் துப்புரபு பணியை மேற்கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
டீம் சிலாங்கூர் குழுவில் இணைந்து செயலாற்ற விரும்புவோர் bit.ly/SkuadBencanaTeamSelangor என்ற அகப்பக்கம் வாயிலாக அல்லது 013-5303578 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
சிலாங்கூரில் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை தற்காலிக நிவாரண மையங்களுக்கு கொண்டுச் சென்று சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடும்படி டீம் சிலாங்கூர் குழுவுக்கு மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுகளை விநியோகிக்கும் பணியிலும் இந்த டீம் சிலாங்கூர் தன்னார்வலர்கள் ஈடுபடுவர் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியிருந்தார்.