ஷா ஆலம், டிச 27- வெள்ளம் காரணமாக ஷா ஆலம் வட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில் குவிந்து காணப்ப்படும் குப்பைகள் விரைந்து அகற்றப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
பாடாங் ஜாவாவில் வட்டாரத்தின் ஒரு பகுதியில் குப்பைகள் அகற்றப்படுவதற்கு முன்னரும் அகற்றப்பட்ட பின்னரும் உள்ள காட்சியை சித்தரிக்கும் புகைப்படங்களை அமிருடின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அப்பகுதியில் 20 நிமிடங்களில் குப்பைகள் அகற்றப்பட்டு இடம் முற்றிலும் சுத்தப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
வெள்ளத்தால் சேதமடைந்த வீட்டு தளவாடப் பொருள்கள் அடங்கிய குப்பைகள் அகற்றப்பட்டு விட்டதை நாங்கள் மேற்கொண்ட ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.
மாநிலத்தில் வெள்ளத்தால் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதற்கு இரண்டு வார காலம் பிடிக்கும் என மாநில அரசு கருதுகிறது.
தற்போது குப்பைகளை அகற்றும் பணி 25 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளதாகவும் வார இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 50 விழுக்காட்டை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மந்திரி புசார் குறிப்பிட்டிருந்தார்