ஷா ஆலம், டிச 28- வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை சுத்தம் செய்வதற்கு தன்னார்வலர்களின் உதவி தேவைப்படுவோர் www.teguhbersama.com என்ற அகப்பக்கம் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய விரும்புவோரும் இதே அகப்பக்கத்தின் வாயிலாக தங்களின் நன்கொடைகளை வழங்கலாம் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்வதற்கும் குப்பைகளை அகற்றுவதற்கும் உதவி தேவைப்படுவோர் சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மிஷல் இங் மேய் ஸீ ஏற்பாட்டிலான இந்த உதவித் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம் என அவர் சொன்னார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலாங்கூர் மாநில மக்களுக்கு உதவுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த தன்னார்வலர்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் அவர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் மாநில அரசு தாபோங் இக்தியார் சிலாங்கூர் பங்கிட் நிதித் திட்டத்தை கடந்த 21 ஆம் தேதி தொடக்கியது. மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கி இத்திட்டத்தை தொடக்கி வைத்தார்.