கோலாலம்பூர், டிச 28- நாட்டில் நேற்று புதிதாக 2,757 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று கண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இந்த நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 43 ஆயிரத்து 936 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று பதிவான சம்பவங்களில் 40 மட்டுமே கடுமையான பாதிப்பை கொண்ட மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தைச் சேர்ந்தவை என்றும் எஞ்சியவை ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பைக் கொண்டவை என்றும் சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
நேற்றைய சம்பவங்களில் 2,594 உள்ளூரில் பரவிய வேளையில் 297 சம்பவங்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டன. நோய் கண்டவர்களில் 297 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் 169 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது என்றார் அவர்.
கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து நேற்று 4,620 பேர் குணமடைந்தனர். இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து இந்நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 69 ஆயிரத்து 654 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று புதிதாக 7 நோய்த் தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்ட வேளையில் தீவிரமாக உள்ள தொற்று மையங்களின் எண்ணிக்கை 223 ஆக பதிவாகியுள்ளது.