ஷா ஆலம், டிச 27- சிலாங்கூரின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த வாரம் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளிலிருந்து 13,699 டன் குப்பைகளை கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மேண்ட் நிறுவனம் அகற்றியுள்ளது.
மாநில அரசின் அந்த துணை நிறுவனம் மேற்கொண்ட இந்த பணிகளுக்கு உண்டான செலவு 60 லட்சத்து 31 ஆயிரம் வெள்ளியாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
துப்புரவுப் பணி தொடரும் காரணத்தால் குப்பைகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
குப்பைகளை அகற்றும் பணி சீராக மேற்கொள்ளப்படுவதற்கு ஏதுவாக உலு லங்காட் வட்டாரத்திலுள்ள பல சாலைகள் திங்கள் முதல் வியாழன் வரை காலை 8.00 மணி முதல் இரண்டு மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அவர் தெரிவித்தார்.
ஆகவே, பொதுமக்கள் குறிப்பாக துப்புரவுப் பணிக்காக அப்பகுதிக்குச் செல்ல விரும்பும் தன்னார்வலர்கள் பொறுமை காக்க வேண்டுமாய் அவர் கேட்டுக் கொண்டார்.
வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளிலிருந்து குப்பைகளை விரைவாக அகற்றுவதற்கு ஏதுவாக துப்புரவு பணிகள் நேற்று தொடங்கி இரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.