ஷா ஆலம், டிச 29– வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள் மற்றும் விவசாயிகளுக்கு உதவுவதற்கான பொருத்தமான வழிவகைகள் குறித்து மாநில அரசு ஆராய்ந்து வருகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்வதில் தமது தரப்பு தற்போதைக்கு முன்னுரிமை அளித்து வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த பேரிடரில் விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளதை அரசு உணர்ந்துள்ளது. அத்தரப்பினருக்கு சக்திக்குட்பட்டு உதவுவதற்கான வழிகளை அது ஆராய்ந்து வருகிறது என்றார் அவர்.
தற்போதைக்கு பாதிக்கப்பட்ட இடங்களைச் சுத்தம் செய்வதில் முன்னுரிமை அளித்து வருகிறோம். இதர உதவிகள் குறித்து அவ்வப்போது அறிவித்து வருவோம் என்றார் அவர்.
சிப்பாங் மாவட்டத்தில் வெள்ளத்திற்கு பிந்தைய நிலவரங்களைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனத் தெரிவித்தார்.
அம்மாவட்டத்தில் வெள்ள நிலவரங்கள் குறித்து கருத்துரைத்த அவர், இங்கு நிலைமை சீரடைந்து வருவதோடு துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது என்றார்.
சிப்பாங் மாவட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலானோர் தற்காலிக நிவாரண மையங்களுக்குச் செல்லவில்லை. சுமார் 9,000 பேர் வீட்டிலேயே தங்கியிருக்க முடிவு செய்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.