ஷா ஆலம், ஜனவரி 2 - சிலாங்கூரின் எதிர்காலத் திட்டமிடலில் பருவநிலை மாற்றம் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். சமீபத்தில் மாநிலத்தில் பல பகுதிகளை கடுமையாகப் பாதித்த மோசமான வெள்ளத்தைத் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளை கருத்தில் கொள்வது அவசியம் என்று அவர் சொன்னார். 2021 வெள்ளப் பேரழிவு பிரதிரூப மாற்றத்திற்கான தூண்டுதலாக இருக்க வேண்டும். பருவநிலை மாற்றம் நம் அனைவருக்கும் பெரும் சவாலாக உள்ளது அடிக்கடி வலியுறுத்தப்பட்டு வருகிறது என்று 2022 புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அவர் தெரிவித்தார். இந்த அம்சங்களைக் கருத்தில் கொண்டு எந்த எதிர்காலத் திட்டத்திலும் பருவ நிலை மாற்றத்தை ஒரு முக்கிய அங்கமாகக் கொள்ள வேண்டும் என்று மாநில அரசு முன்மொழிகிறது என்று அவர் குறிப்பிட்டார். டிசம்பர் 17 முதல் 19 வரை பெய்த அசாதாரண மழையின் விளைவாக சிலாங்கூர் முழுவதும் பல இடங்களில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. ஷா ஆலம், செக்சன் 25 இல் உள்ள தாமான் ஸ்ரீ மூடா பகுதி இந்த வெள்ளத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. இந்த பேரிடரில் டிசம்பர் 22 வரை 14 பேர் உயிரிழந்ததோடுஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் தற்காலிக நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டனர்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2022/01/PSX_20211218_182800-1-960x640.jpg)