ஷா ஆலம், ஜன 3- இங்குள்ள கம்போங் பாரு ஹைக்கோம், ஜாலான் பூங்கா தஞ்சோங் 4ஏ மற்றும் ஜாலான் பூங்கா தஞ்சோங் 1 ஆகிய பகுதிகளில் குவிந்த வெள்ளத்திற்கு பிந்தைய குப்பைகளை பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் அகற்றியது.
மூன்று தன்னார்வலர்கள் உள்பட 19 பேரங்கிய மாநகர் மன்றக் குழுவினர் இந்த துப்புரவு பணியில் ஈடுபட்டதாக மாநகர் மன்றம் தெரிவித்தது.
குப்பை லோரிகள், மண்வாரி இயந்திரங்கள், வேன்கள் உள்பட பல்வேறு சாதனங்களின் உதவியுடன் நேற்று காலை 8.00 மணி முதல் இந்த துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த துப்புரவுப் பணி மாலை மணி 2.50 அளவில் முடிவுக்கு வந்தது. இந்த பணியின் போது 5 லோரி குப்பைகள் அப்பகுதியிலிருந்து அகற்றப்பட்டன.
வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து குப்பைகளை அகற்றும் பணி கடந்த மாதம் 20 ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊராட்சி மன்றங்கள், கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனெஜ்மெண்ட் நிறுவனம் மற்றும் தன்னார்வலர்கள் இந்த துப்புரவுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.