ஷா ஆலம், ஜன 7– பெட்டாலிங் மாவட்டத்தில் நேற்று வரை பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் 1,000 வெள்ளி உதவித் தொகையைப் பெற்றுள்ளனர்.
இரு தினங்களுக்கு முன்னர் 5,487 பேர் இந்த உதவித் தொகையைப் பெற்ற வேளையில் நேற்று கம்போங் ஸ்ரீ அமான் மற்றும் கம்போங் தெங்கா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 1,400 பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டதாக பெட்டாலிங் மாவட்ட அதிகாரி டத்தோ ஜோஹாரி அனுவார் கூறினார்.
ஷா ஆலம் வட்டாரத்தைச் சேர்ந்த 85 விழுக்காட்டினர் உதவித் தொகையைப் பெற்றுள்ளனர். எஞ்சியோருக்கு கூடிய விரைவில் இத்தொகை பகிர்ந்தளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
உதவித் தொகையை பகிர்ந்தளிக்கும் பணி சீராக நடைபெற்று வருகிறது. விண்ணப்பதாரர்களின் தரவுகளை கணினியில் உள்ளிடும் நடவடிக்கையில் 60 அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்றார் அவர்.
அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களை எங்கள் அதிகாரிகள் தொடர்பு கொள்வர். நிர்ணயிக்கப்பட்ட நேரம் மற்றும் இடத்தில் அந்த உதவித் தொகையை அவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
பெட்டாலிங் மாவட்டத்தில் மட்டும் வெள்ள உதவி நிதியைப் பெறும் தகுதியுள்ளவர்களின் எண்ணிக்கை 12,000 முதல் 15,000 வரை இருக்கும் என மதிப்பிடப்படுவதாகவும் அவர் சொன்னார்.