ஷா ஆலம், ஜன 7- வெள்ளத்தின் போது தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் தங்காதவர்களை பந்துவான் சிலாங்கூர் பங்கிட் உதவித் திட்டத்தில் பதிவு செய்வதற்காக கோல லங்காட் மாவட்டத்தில் நான்கு ஓரிட மையங்கள் அமைக்கப்படும்.
பாலாய் பெங்குளு தஞ்சோங் 12, பாலாய் பெங்குளு தெலுக் பங்ளிமா காராங், பாலாய் பெங்குளு மோரிப்/கிளானாங், பாலாய் பெங்குளு பண்டார்/ஜூக்ரா ஆகிய நான்கு இடங்களில் இந்த ஓரிட மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக கோல லங்காட் மாவட்ட அதிகாரி முகமது ஜூஸ்னி ஹஷிம் கூறினார்.
கடந்த மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் இந்த நான்கு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் இங்கு அந்த ஓரிட மையங்கள் அமைக்கப்படுவதாக அவர் சொன்னார்.
இம்மையங்கள் இம்மாதம் 20 ஆம் தேதி வரை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறந்திருக்கும் என்று சிலாங்கூர் கினியிடம் அவர் தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்கும் சேதமடைந்த அடிப்படை வசதிகளை சரி செய்வதற்கும் 10 கோடி வெள்ளி நிதியில் சிலாங்கூர் பங்கிட் திட்டம் தொடக்கப்படுவதாக மாநில அரசு கடந்த மாதம் 21 ஆம் தேதி அறிவித்திருந்தது.
இத்திட்டத்தின் கீழ் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10,000 வெள்ளியும் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு தலா 1,000 வெள்ளியும் வழங்கப்படுகிறது.