ஷா ஆலம், ஜன 10- பண்டார் உத்தாமா தொகுதி ஏற்பாட்டில் வரும் 15 ஆம் தேதி சனிக்கிழமை இலவச மருத்துவ பரிசோதனை இயக்கம் நடைபெறவுள்ளது.
அசுந்தா மருத்துவமனையின் ஆதரவிலான இந்த மருத்துவ பரிசோதனை இயக்கம் கம்போங் காயு ஆரா பாலாய் ராயாவில் காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
பொது மக்களுக்கு சுகாதாரத்தை பேணுவதன் அவசியத்தையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் நோக்கில் இந்த மருத்துவ பரிசோதனை இயக்கம் நடத்தப்படுவதாக அவர் சொன்னார்.
குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினரை இலக்காக கொண்டு இந்த இயக்கம் நடத்தப்படுகிறது. இந்த பரிசோதனை இயக்கத்தில் கம்போங் காயு ஆரா பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்த மருத்துவ பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்வோர் மலேசிய பிரஜையாகவும் மாதம் 2,500 வெள்ளிக்கும் குறைவான வருமானத்தைப் பெறுபவராகவும் இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். இதனை நிரூபிக்கும் விதமாக அவர்கள் சம்பள விபர அறிக்கை அல்லது சமூக நலத் துறையின் உதவிகளைப் பெறுவதற்கான சான்றுகளை சமர்பிக்க வேண்டும் என்றார் அவர்.
இந்த மருத்துவ சோதனையில் பங்கு கொள்ள விரும்புவோர் முழுமையான ஆவணங்களுடன் http://tiny.cc/KlinikKayuaAra எனும் அகப்பக்கம் வாயிலாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
மேல் விரபங்களுக்கு 016-6849371 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.