ஷா ஆலம், ஜன 14- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் இரண்டாம் கட்ட துப்புரவுப் பணி மூன்று மாதங்களில் முற்றுப் பெறும் என்று மாநிலத்தில் குப்பைகளை அகற்றும் பணிக்கு பொறுப்பேற்றுள்ள கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனெஜ்மெண்ட் நிறுவனம் கூறியுள்ளது.
கல்வாய்கள் மற்றும் நீரோடைகளில் உள்ள குப்பைகளை அகற்றுவதை இலக்காக கொண்ட இந்த இரண்டாம் கட்ட துப்புரவுப் பணி கடந்த 8 ஆம் தேதி தொடங்கப்பட்டதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார்.
இந்நடவடிக்கையின் போது தினசரி 3,000 டன் குப்பைகள் அகற்றப்படுவதாக கூறிய அவர், அக்குப்பைகள் ஜெரம், தஞ்சோங் 12 மற்றும் டெங்கிலில் உள்ள குப்பை கொட்டும் மையங்களுக்கு அனுப்பப்படுவதாகச் சொன்னார்.
தற்காலிக குப்பை சேகரிப்பு மையங்கள் யாவும் மூடப்பட்டு விட்டதால் தற்போது சேகரிக்கப்படும் குப்பைகள் யாவும் நேரடியாக பிரதான கொட்டும் மையங்களுக்கு கொண்டுச் செல்லப்படுகின்றன என்றார் அவர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரண்டாம் கட்ட துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதற்காக 8,000 ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.